தமிழ்மொழியின் சிறப்பு


தமிழ்மொழியின் சிறப்பு
x
தினத்தந்தி 28 Jun 2021 12:49 PM GMT (Updated: 28 Jun 2021 12:49 PM GMT)

பழமையான மொழி, பண்பட்ட மொழி, நம் பைந்தமிழ் மொழி, தேனினும் இனியது நம் தீந்தமிழ் மொழி தமிழ் என்றால் எளிமை.

பழமையான மொழி, பண்பட்ட மொழி, நம் பைந்தமிழ் மொழி, தேனினும் இனியது நம் தீந்தமிழ் மொழி தமிழ் என்றால் எளிமை. தமிழ் என்றால் அழகு. தமிழ் என்றால் அமிழ்தம். இனிமையான, எளிமையான மொழியாக விளங்குகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற தமிழ்மொழியை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்

எத்தனையோ மொழிகள் உலகில் தோன்றியுள்ளன. கால வெள்ளத்தை கடக்க முடியாமல் எத்தனையோ மொழிகள் அழிந்துவிட்டன. உலகிலேயே பழமையான மொழிகள் எனப் பாராட்டப்படுபவை லத்தீன், கிரேக்கம், எபிரேயம், சீனம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய 6 மொழிகள் தாம். அவற்றில் லத்தீன், கிரேக்கம், எபிரேயம் இன்று இல்லை. அதேபோல் சமஸ்கிருதம் பேச்சுவழக்கில் குன்றிவிட்டது. எஞ்சியிருப்பவை இரண்டே. ஒன்று தமிழ். மற்றொன்று சீன மொழி. அதில் தமிழ்மொழி அழியாத மொழியாக, சிதையாத மொழியாக அன்று முதல் இன்று வரை ஒரே நிலையில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இலக்கண அமைப்பில் புதுமை கண்ட பெருமை தமிழ்மொழிக்கே உண்டு. தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களாய் அமைத்து தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். உலகில் ஏனைய மொழிகளில் எழுத்துக்கு இலக்கணம் உண்டு. ஆனால் பொருளுக்கு இலக்கணம் வேறு எந்த மொழியிலும் இல்லை. தமிழ்மொழி ஒன்று தான், வாழ்வுக்கே இலக்கணம் அமைத்து சிறந்து மிளிரும் வளமான மொழியாகும். மானிட வாழ்க்கையை அகம், புறம், என இருவகைப்படுத்தி இலக்கணங்களை கொண்ட பெருமை தமிழ்மொழி ஒன்றுக்குத்தான் உண்டு.

வாழ்வுக்கே இலக்கணம் வகுத்த வண்டமிழ் மொழியில், பழந்தமிழர் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் வளமான இலக்கியங்களுக்கு குறைவில்லை. இலக்கியம் என்னும் சஞ்சீவியால் தான் தமிழ்மொழி இன்றளவும் சீரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, பதினெண் மேல்கணக்கு, ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறு காப்பியம் போன்றவை. தமிழின் பெருமையை பறைசாற்றுகின்றன. பன்னிரு திருமுறைகள், நாலாயிரத் திவ்யபிரபந்தங்கள் பக்தி மணம் பரப்புகின்றன. நல்வழி, மூதுரை, உலகநீதி, கொன்றைவேந்தன் போன்றன நீதிநெறிகாட்டும் வழிகாட்டிகளாய் விளங்குகின்றன.

தொல்காப்பியம், அகத்தியம், நன்னூல், தண்டியலங்காரம், யாப்பெருங்கலக்காரிகை போன்ற இலக்கண நூல்கள் தமிழ்க்கோவிலை அழியாமல் காத்து வருகின்றன.

அமிழ்தத்தை கடைந்தால் அதிலிருந்து கிடைக்கும் அரிய சொல்லே ‘தமிழ்’ என்று போற்றுகின்றார் நாமக்கல் கவிஞர். தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார், இங்கமரர் சிறப்புக் கண்டார் என தமிழை அமிழ்தமாக சுவைத்தார் பாரதியார்.

‘தமிழுக்கு அமுதென்றுபேர்- அந்தத்

தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’

என்று தமிழை அமிழ்தமாகவும், உயிராகவும் மதித்தார் புரட்சி கவிஞர் பாரதிதாசன்.

அமிழ்தான தமிழை அகத்தில் நினைப்போம். உயிரான தமிழை உள்ளத்தில் கொள்வோம். ‘தமிழ் எங்கள் உயிர், என்ற உணர்வோடு வாழ்வோம்’. ‘உயிர் இன்றேல் உடல் இல்லை, தமிழ் இல்லை என்றால் நாம் இல்லை’. எத்தனையோ இலக்கியங்களை ஈன்றெடுத்த நம் முத்தனைய உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியை நாம் நெஞ்சாரப்போற்றுவோம்.

Next Story