"தெய்வ வாக்கு விலங்கு - தேவாங்கு?" வேட்டையாடப்பட காரணம் என்ன?


தெய்வ வாக்கு விலங்கு - தேவாங்கு? வேட்டையாடப்பட காரணம் என்ன?
x

கோப்புப்படம் 

உலகில் அருகிவரும் இனமாக கருதப்படும் தேவாங்கு இனத்தை பாதுகாக்க கடவூர் மலைப் பகுதியில் சரணாலயம் அமைக்கப்படவுள்ளது.

சென்னை,

உலகில் அருகிவரும் இனமாக கருதப்படும் தேவாங்கு இனத்தை பாதுகாக்க கடவூர் மலைப் பகுதியில் சரணாலயம் அமைக்கப்படவுள்ளது. "தேவாங்கு மாதிரி இருக்க..." என உருவ கேலி செய்யும் பலருக்கு தெரிவதில்லை தேவாங்கின் அருமை.

'முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல்' பாரி காலத்தில் கடற்படைக்கு திசை காட்டியாக இருந்ததே இந்த தேவாங்கு தானாம். உருண்டை உருண்டையான தனது ஆந்தை கண்களை உருட்டும் போதும் சரி. தனது பாவமான பார்வையால் நம்மை பரிதாப பட வைக்கும் போதும் சரி. கொஞ்சம் க்யூட்டாக தெரியும் இவை.

தனது குச்சி போன்ற கை கால்களை கொண்டு நடப்பதை பார்த்தால் சற்று பயமாக தான் இருக்கிறது. பகல் முழுக்க மரத்தில் தஞ்சமடையும் இவை. உணவு தேடி இரவில் நடமாடும் வழக்கம் கொண்டவை. அதிலும் இவற்றிற்கு மிகவும் பிடித்த உணவு செந்நிற எறும்பு வகையான முசுறு தான். மருத்துவ குணம் கொண்ட எறும்புகளை அதிகம் உட்கொள்வதால் தேவாங்கு இறைச்சி பல மருத்துவ குணம் கொண்டது என்ற மூட நம்பிக்கை உள்ளது. அதுவே அவற்றின் அழிவிற்கும் காரணமாகி வருகிறது.

மாந்திரீகத்திற்கும் சிலர் தேவாங்கை பயன்படுத்தி வருகின்றனர். தேவாங்கு தொட்டு கொடுக்கும் கருப்பு கயிறு பல தோஷங்களை நீக்கும் சக்தி கொண்டது என்று, இன்றளவும் சிலர் நம்புகின்றனர். இன்று இந்த அரிய வகை சிறிய பாலுாட்டி அதிகளவில் காணப்படும் இடமாக உள்ளது, கடவூர் மலை. அதுவும் சாம்பல் நிற தேவாங்குகளின் வசிப்பிடமாக விளங்குகிறது, இந்த மலை.

இந்த மலையை தேவாங்கு வாழும் சரணாலயமாக அறிவிக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப் பட்டிருப்பதோடு, அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கரூர் திண்டுக்கல் மாவட்டங்களில் சுமார் 11 ஆயிரத்து 806 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைய இருப்பதை அரசாணையின் மூலம் உறுதி செய்துள்ளது, தமிழக அரசு.


Next Story