கடலின் ஆச்சரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்


கடலின் ஆச்சரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்
x

தெருக்கள் போன்ற கடினமான தரைத்தள பரப்புகளை விட கடற்கரையில் நடப்பது, ஓடுவது கால்களுக்கு இதமளிக்கும். கால் நரம்புகளை வலுப்படுத்தும்.

வார விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு சென்று பொழுதை கழிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை ரசித்துப் பார்த்தல், கடற்கரை மணலில் விளையாடுதல், கடல் அலையின் ஆக்ரோஷத்தையும், அமைதியையும் ஆசுவாசமாக அமர்ந்து ரசித்தல், கடல் காற்றை சுவாசித்தபடி நடைப்பயிற்சி செய்தல் என கடற்கரையுடனான பந்தம் தவிர்க்க முடியாதது. கடற்கரையில் நேரத்தை செலவிடுவது ஆச்சரியம் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

சைனஸ் பிரச்சினை

சைனஸ் பாதிப்பால் அவதிப்படுபவர்கள் சுவாச பாதைகள் தடையின்றி செயல்படுவதற்கு உப்பு நீரை கொண்டு முகம் கழுவுவதுண்டு. கடல் காற்றில் கலந்திருக்கும் உப்பு சுவாச பாதையை தெளிவாக வைத்திருப்பதற்கு உதவும். கடல் காற்றில் கலந்திருக்கும் நுண்ணுயிரிகள் சைனஸ் ஆரோக்கியத்திற்கு உதவும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கையாக இருக்கிறது. கடலோரத்தில் வசிப்பவர்கள் சிரமமின்றி நன்றாக சுவாசிப்பதும் தெரியவந்துள்ளது.

பதற்றம்

பணியில் ஏற்படும் மன அழுத்தம், குடும்பத்தில் நிலவும் குழப்பம் காரணமாக மனச்சோர்வு ஏற்பட்டால் இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது அவசியமானது. கடற்கரைக்கு அருகில் வசிப்பவர்களாக இருந்தால் அங்கு சென்று சிறிது நேரம் செலவிடலாம். கடல் நீரில் சிறிது நேரம் விளையாடினாலே போதுமானது. அது பதற்றம், மன அழுத்தத்தை குறைப்பதற்கு உதவும்.

தூக்கம்

உடலுக்கும், உணர்ச்சிகளுக்கும் தூக்கம் முக்கியமானது. முதுமைப் பருவத்தை எட்டுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இரவில் போதுமான நேரம் தூங்குவதில்லை. இரவில் தூக்கம் வராமல் அவதிப்பட்டால் கடற்கரையோரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். அது இரவில் ஒரு மணி நேரம் கூடுதலாக தூங்குவதற்கு வழிவகுக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி

பருவகாலங்களில் ஏற்படும் காய்ச்சலை தவிர்க்க கடலோரப் பகுதிக்கு செல்வது சிறந்ததாக அமையும். தாதுக்கள், துத்தநாகம், செலினியம் மற்றும் சிலிக்கான் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் கடல் நீரில் கலந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு அமைப்புக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன. கடற்கரையில் நேரத்தை செலவிடுவதன் மூலம் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பருவகால நோய்க்கிருமிகளுக்கு எதிராக உடலை பாதுகாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உடற்பயிற்சி

உடலமைப்பை சுறுசுறுப்பாக செயல்பட வைப்பதற்கு கடல் எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. கடற்கரையில் நடைப்பயிற்சி, ஜாக்கிங் மேற்கொள்வதுடன் துடுப்பு படகை இயக்கலாம். இது கைகளுக்கும், உடல் பாகங்களுக்கும் சிறந்த உடற்பயிற்சியாக அமையும். கடல் நீரில் நீந்தியும் மகிழலாம். இதுவும் சிறந்த உடற்பயிற்சியாக அமையும். தியானம் செய்வதற்கு இடையூறு இல்லாத உகந்த சூழலை விரும்புபவர்கள் கடற்கரையை தேர்ந்தெடுக்கலாம். கடல் அலைகளின் நிதானமான சத்தம் தியான நிலைக்கு எளிதில் அழைத்து செல்லும் என்பதை ஆய்வுகளும் உறுதிப்படுத்தி யுள்ளன.

உடலில் சேரும் அதிகபடியான கொழுப்பு உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கும். குளிர்ந்த நீரில் நீச்சல் பயிற்சி மேற்கொள்வது கொழுப்பு திசுக்களை கரைக்க உதவும். உடல் எடையை குறைப்பதை இலக்காக கொண்டிருப்பவர்கள் கடல் நீரில் நீச்சல் அடிக்கலாம்.

சுத்தமான காற்று

கடல் ஒரு இயற்கை வடிகட்டியாக செயல்படுகிறது. அங்கு காற்று மாசுபாடு அடைவதற்கான சூழல் குறைவு. மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது மாசுபாடு குறைவாகவே இருக்கும். கடல் தன்னை சூழ்ந்திருக்கும் காற்றை சுத்திகரித்து தூய்மையாக வைத்திருக்கும் தன்மை கொண்டது. அதனால் அதை 'பச்சை நுரையீரல்' என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.

ஆழ்கடல் நீர்

கடல் வழங்கும் மிகப்பெரிய ஆரோக்கிய வரங்களில் ஒன்றாக ஆழ்கடல் நீர் இருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அதிக தூய்மை, குறைந்த வெப்பநிலை, தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்றவை இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை கட்டுப்படுத்த உதவும்.

மணலில் நடத்தல்

நடை பாதை, சாலைகள், தெருக்கள் போன்ற கடினமான தரைத்தள பரப்புகளை விட கடற்கரையில் நடப்பது, ஓடுவது கால்களுக்கு இதமளிக்கும். கால் நரம்புகளை வலுப்படுத்தும். கடற்கரையில் நடப்பது மூட்டுகளுக்கும் இதமளிக்கும். மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் கடற்கரை மணலில் நடப்பது நிவாரணம் தரும்.


Next Story