தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 நாட்கள் சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்


தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 நாட்கள் சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்
x

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை மற்றும் சிறப்பு பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டு இத்திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்று திறனாளிகள் அனைவருக்கும், பிரத்யேக நீல நிறத்திலான அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 526 கிராம ஊராட்சிகளில் மாற்றுத் திறனாளிகள் குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், இரு மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய்க்கிழமை கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்கள் முன்னிலையில் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் 10-ந் தேதி வரை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமினை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதி உடைய மாற்றுத்திறனாளிகள் நீல நிற வேலை அட்டையினை பெற்று பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story