1,000 பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு


1,000 பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு
x

ஜேடர்பாளையம் அருகே மீண்டும் 1,000 பாக்கு மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பெண் படுகொலை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரபாளையத்தில் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பட்டதாரி இளம்பெண் ஆடு மேய்க்க சென்றார். அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்ல ஆலையில் வேலை பார்த்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

இதன் தொடர்ச்சியாக வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பஸ் போன்றவற்றிற்கு தீ வைத்தது, குளத்தில் விஷம் கலந்தது என அடுக்கடுக்காக பல வன்முறை சம்பவங்கள் கடந்த 2 மாதங்களாக நடந்து வந்தன.

இதற்கிடையே கடந்த மே மாதம் 13-ந் தேதி நள்ளிரவு முத்துசாமிக்கு சொந்தமான ஆலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த கொட்டகையை மர்ம நபர்கள் உடைத்தனர். மேலும் அங்கு தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மண்எண்ணெய் பாட்டில்களை வீசி தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்து கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதில் ராஜேஷ் என்பவர் உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்றனர்.

தொடரும் வன்முறை சம்பவம்

இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பிரபா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து புதுப்பாளையம் பகுதியில் முருகேசனுக்கு சொந்தமான வாழை தோப்பில் 500-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர்.

இதேபோல கடந்த மாதம் 24-ந் தேதி, ஜேடர்பாளையம் அருகே சின்னமருதூர் பகுதியில் பொத்தனூரை சேர்ந்த எல்.ஐ.சி. முகவர் சவுந்தர்ராஜனுக்கு சொந்தமான 1,600 பாக்கு மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர்.

இதையடுத்து தொடரும் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில், ஜேடர்பாளையம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு, பகலாக துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விசாரணையை தீவிரப்படுத்தி அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு எல்.ஐ.சி. முகவர் சவுந்தர்ராஜனின் பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட அதே பாக்கு தோப்பில், மீண்டும் 1,000-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர்.

மேலும் அருகே உள்ள பெரியமருதூரை சேர்ந்த பிரகாஷ் மற்றும் சின்னமருதூர் பகுதியை சேர்ந்த மணி ஆகியோரது தோட்டத்தில் இருந்த மரவள்ளி கிழங்கு செடிகளும் வெட்டி சேதப்படுத்தப்பட்டன. பின்னர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குழாய்களையும், மின் ஒயர்களையும் மர்மநபர்கள் அறுத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

பொதுமக்கள் பதற்றம்

இது குறித்து தகவல் அறிந்து கோவை மண்டல ஐ.ஜி.சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் போலீசார் ஜேடர்பாளையம் பகுதிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. அது யாரையும் கவ்விபிடிக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஜேடர்பாளையம் பகுதியில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story