தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய வேட்டை... 136 பேர் அதிரடி கைது


தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய வேட்டை... 136 பேர் அதிரடி கைது
x
தினத்தந்தி 15 May 2023 5:35 AM GMT (Updated: 15 May 2023 6:22 AM GMT)

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 136 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 136 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 199 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் சாராய வியாபாரிகள் 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 226 லிட்டர் சாராயம் மற்றும் 517 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 57 சாராய வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 109 லிட்டர் சாராயம், 450 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 47 பேர் கைது செய்யப்பட்டு, 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கள்ளக்குறிச்சியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஷ சாராயத்தை கண்டுபிடித்து ஒழிப்பதற்கு சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story