கள்ளச்சாவி போட்டு மோட்டார் சைக்கிள் திருடிய 16 வயது சிறுமி கைது - பெட்ரோல் காலியாகும் வரை ஆசை தீர ஓட்டினார்


கள்ளச்சாவி போட்டு மோட்டார் சைக்கிள் திருடிய 16 வயது சிறுமி கைது - பெட்ரோல் காலியாகும் வரை ஆசை தீர ஓட்டினார்
x

கள்ளச்சாவி போட்டு மோட்டார்சைக்கிள்களை திருடிய 16 வயது சிறுமி கைது செய்யப்பட்டார். பெட்ரோல் காலியாகும் வரை ஆசை தீர ஓட்டிவிட்டு காலியானதும் அந்த இடத்திலேயே நிறுத்தி செல்வதை வழக்கமாக கொண்டதும் தெரிந்தது.

சென்னை

சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் காத்பாடா பகுதியைச் சேர்ந்தவர் செரீப் (வயது 38). இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டுபோனதாக வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பெண் ஒருவர்தான் அந்த மோட்டார் சைக்கிளை திருடிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

அந்த காட்சிகளை வைத்து சென்னை சென்டிரல் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த சிறுமி, மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் அவரால் சொந்தமாக மோட்டார் சைக்கிள் வாங்க முடியாத நிலையில் இருந்தார். இதனால் ஆங்காங்கே நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்களை கள்ளச்சாவி போட்டு திறந்து ஆசை தீர ஓட்டி மகிழ்ந்து வந்தார்.

இவ்வாறு பெட்ரோல் காலியாகும் வரை ஆசை தீர ஓட்டிய பிறகு பெட்ரோல் தீர்ந்ததும் அந்த இடத்திலேயே அந்த மோட்டார்சைக்கிள்களை விட்டுச்சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு திருவொற்றியூர், பெரும்பாக்கம், வண்ணாரப்பேட்டை உள்பட 4 இடங்களில் சிறுமி திருடி விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான சிறுமியை புரசைவாக்கம் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story