2 பத்திர எழுத்தர்கள் கைது


2 பத்திர எழுத்தர்கள் கைது
x
தினத்தந்தி 26 Oct 2023 10:15 PM GMT (Updated: 26 Oct 2023 10:16 PM GMT)

போலி ஆவணம் மூலம் சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்த 2 பத்திர எழுத்தர்களை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

நாகர்கோவிலை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கான்வென்ட் ரோடு பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை விருதுநகரை சேர்ந்த சந்திரசேகர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சங்கர் ஆகியோர் இணைந்து வாங்கினர். இதனை விற்பனை செய்ய பத்திரப்பதிவின்போது 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டு கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சந்திரசேகர், சங்கர் இருவரும் இறந்து விட்டனர். இதனால் அந்த சொத்தை யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகள் சாந்தி, அவரது கணவர் சந்திரசேகர், பத்திர எழுத்தர்கள் கில்பர்ட் (வயது 51), மருதுபாண்டி (55) மற்றும் பலர் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து பல கோடி ரூபாய் சொத்துகளை அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவனந்தபுரத்தை சேர்ந்த சங்கரின் மனைவி ஜெயந்தி என்பவரின் பவர் ஏஜெண்டான கோபி கொடைக்கானல் கோர்ட்டில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவின்படி, கடந்த ஆகஸ்டு மாதம் போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற சாந்தி, அவரது கணவர் சந்திரசேகர், பத்திர எழுத்தர்கள் கில்பர்ட், மருதுபாண்டி உள்பட 11 பேர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சாந்தியை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த பத்திர எழுத்தர்கள் கில்பர்ட், மருதுபாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story