போலி சான்றிதழ் தயாரித்து கிரேன் ஆபரேட்டரை பணியில் சேர்த்த 2 என்ஜினீயர்கள் கைது


போலி சான்றிதழ் தயாரித்து கிரேன் ஆபரேட்டரை பணியில் சேர்த்த 2 என்ஜினீயர்கள் கைது
x

மெட்ரோ ரெயில் பணியின்போது கிரேன் சரிந்து அரசு பஸ் மீது இரும்பு கம்பிகள் விழுந்த விபத்தில், போலி சான்றிதழ் தயாரித்து கிரேன் ஆபரேட்டரை பணியில் சேர்த்த 2 என்ஜினீயர்கள் கைதானார்கள்.

சென்னை

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2-ம் கட்டமாக மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது. கிண்டி-போரூரை இணைக்கும் மவுண்ட்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் அதிகாலை மாநகர பஸ் ஒன்று குன்றத்தூரில் இருந்து போக்குவரத்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு ஆலந்தூர் பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. ராமாபுரம் அருகே பஸ் வந்தபோது மெட்ரோ ரெயில் பணிக்காக டிரெய்லர் லாரியில் ஏற்றி வந்த இரும்பு கம்பிகளை ராட்சத கிரேன் மூலம் தூக்கி பள்ளத்தில் நிறுத்தும் பணியின்போது, இரும்பு கம்பிகளோடு கிரேன் திடீரென சரிந்து பஸ் மீது விழுந்தது.

இதில் மாநகர பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது. கண்ணாடியும் நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர்கள் 2 பேர் மற்றும் டிரெய்லர் லாரி டிரைவர் ஆகியோர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராமாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த தர்மேந்திரகுமார் சிங் என்பவர் முன் அனுபவம் ஏதும் இல்லாமல் போலி சான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது.

அவருக்கு 5 வருடம் அனுபவம் உள்ளதுபோல் போலியாக சான்றிதழ் தயாரித்து கொடுத்து பிரபல கட்டுமான நிறுவனத்தின் என்ஜினீயர்களான அய்யப்பன்தாங்கலை சேர்ந்த சிவானந்த் (43), ஆதம்பாக்கதை சேர்ந்த பொன் சந்திரசேகர் (35) ஆகிய இருவரும் சேர்ந்து வேலைக்கு சேர்த்ததும் தெரியவந்தது.

இதையடுத்து என்ஜினீயர்களான சிவானந்த் மற்றும் பொன் சந்திரசேகர் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story