மோட்டார் சைக்கிளில் சென்றபோது கன்டெய்னர் லாரி மோதி 2 பேர் பலி


மோட்டார் சைக்கிளில் சென்றபோது கன்டெய்னர் லாரி மோதி 2 பேர் பலி
x

சோழவரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 டிரைவர்கள் கன்டெய்னர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

திருவள்ளூர்

தஞ்சை மாவட்டம் திருவுடை மருதூர் பகுதியை சேர்ந்தவர்கள் முத்தரசன் (வயது 34), செந்தில் குமார் (45). லாரி டிரைவர்களான இவர்கள் சோழவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் தாங்கள் தங்கி இருக்கும் இடத்துக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். சோழவரம், ஜி.என்.டி. சாலையில் செங்காலம்மன் கோவில் அருகே சென்றபோது, கும்மிடிப்பூண்டியில் இருந்து சோழவரம் வழியாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென இவர்கள் வந்த மோட்டார் சைக்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் முத்தரசன், செந்தில் குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர். இதை கண்ட லாரி டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் செங்குன்றம் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து போலீசார் விபத்தில் இறந்த இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்தவர் வேலூர் மாவட்டம் கண்ணகிளியின் கிராமத்தைச் சார்ந்த வெங்கடேசன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story