குழந்தை திருமணம் செய்தால் 2 ஆண்டு ஜெயில் - கலெக்டர் எச்சரிக்கை


குழந்தை திருமணம் செய்தால் 2 ஆண்டு ஜெயில் - கலெக்டர் எச்சரிக்கை
x

குழந்தை திருமணம் செய்தால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குழந்தை திருமண தடைச்சட்டம் 2006-ன்படி பெண்ணுக்கு 18 வயதுக்கு கீழும், ஆணுக்கு 21 வயதுக்கு கீழும் நடைபெறும் எந்த திருமணமும் சட்டத்தை மீறிய குற்றச்செயலாகும். குழந்தை திருமணத்தால் பெண் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இந்த குழந்தைகளுக்கு அறிவு முதிர்ச்சி குன்றி, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனவலிமை இழந்து எப்போதும் ஆண்களை சார்ந்து வாழும் சார்பு நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

குழந்தை திருமண தடை சட்டம் 2006-ன் பிரிவு 9,10,11-ன்படி குழந்தை திருமணத்தை நடத்திய பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், மணமகன், திருமணத்தை நடத்தி வைக்கும் மத தலைவர்கள் திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள், நண்பர்கள், திருமணம் நடைபெற உதவிசெய்த நபர்கள், அமைப்புகள், திருமண தரகர் ஆகிய அனைவரும் குற்றம் செய்தவராகக் கருதப்பட்டு அவர்களுக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வகை செய்யப்பட்டுள்ளது.

குழந்தை திருமணத்தை ஆதரிப்பதும் நடத்தி வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தை திருமணம் குறித்த புகார் செய்ய 1098, 1091 மற்றும் 181 முதலிய இலவச உதவி எண்களை அழைக்கலாம். குழந்தை திருமணம் குறித்து புகார் தெரிவிப்பவரின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story