சென்னையில் கொரோனா நோய் அறிகுறி பரிசோதிக்க சென்ற பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை


சென்னையில் கொரோனா நோய் அறிகுறி பரிசோதிக்க சென்ற  பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 17 May 2021 8:39 AM GMT (Updated: 17 May 2021 8:39 AM GMT)

சென்னையில் கொரோனா நோய் அறிகுறி பரிசோதிக்க சென்ற பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

சென்னை

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக 33 ஆயிரத்து 181 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 6 ஆயிரத்து 247 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், சென்னையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 146 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 41 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 166 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்து 835 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் ஆயிரத்து 95 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரத்து 30 பேருக்கும், திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 569 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் காய்ச்சல் பரிசோதனை செய்ய  களமிறக்கப்பட்டுள்ளனர். வீடு வீடாகச் சென்று நோய் தோற்று அறிகுறிகளான காய்ச்சல், சளி இருக்கிறதா என அறிய இளம் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை ஏழுகிணறு பகுதியில் மாநகராட்சி முன்கள பணியாளராக 27 வயதான இளம் பெண் ஒருவர் வீடு வீடாகச் சென்று சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். போர்ச்சுகீசு சர்ச் தெருவில் ஒரு குடியிருப்பில் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சதக்கத்துல்லா என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சதக்கத்துல்லாவிடம் வீட்டில் யாரெல்லாம் உள்ளனர்? யாருக்காவது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா ? என கேட்டுள்ளார் அந்த இளம்பெண். தனது மனைவிக்கு காய்ச்சல் இருப்பதாகவும் வீட்டிற்குள் வந்து உடல் வெப்ப நிலையை பரிசோதிக்குமாறும் சதக்கதுல்லா கூறியிருக்கிறார்.  இளம் பெண் உள்ளே சென்றுள்ளார். ஆனால், வீட்டிற்குள் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொள்வதற்குள் சதக்கதுல்லா கதவை தாழிட்டுள்ளார்.  திடீரென இளம் பெண்ணை பின்னால் இருந்து கட்டிப் பிடித்து ஆபாசமாக நடந்து கொண்டார்.

அதிர்ச்சியடைந்த இளம் பெண் கூச்சலிட்டு கொண்டே வெளியில் ஓடி வந்துள்ளார். சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நடந்ததை அறிந்து சதக்கத்துல்லாவை நையப்புடைத்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட முன் களப்பணியாளரான இளம் பெண் கொடுத்தப் புகாரில் பெண்ணை மானபங்கம் செய்தல், பாலியல் அத்துமீறல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் சதக்கத்துல்லாவை கைது செய்தனர்.

கைதான நபருக்கு 54 வயதாகிறது. மனைவி குழந்தைகள் வேறு வீட்டில் வசிக்கிறார்கள். சம்பவம் நடந்த சதக்கத்துல்லாவுக்கு சொந்தமான இந்த வீட்டில் யாருமில்லாததை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, முன் களப்பணியாளராக பணியாற்றிய இளம் பெண் தனியாக தினமும் வந்து செல்வதை அறிந்து  திட்டமிட்டு  வீட்டிற்குள் அழைத்து சென்று அத்துமீறியதை ஒப்புக்கொண்டுள்ளார். 

Next Story