தமிழக அரசு சார்பில் லண்டனில் பென்னிகுவிக் சிலை: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


தமிழக அரசு சார்பில் லண்டனில் பென்னிகுவிக் சிலை: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x

5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கிற்கு லண்டனில் தமிழக அரசின் சார்பில் சிலை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேற்குதொடர்ச்சி மலையில் தொடங்கி கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டது முல்லைப்பெரியாறு அணை. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள அணையின் இருப்பிடம் கேரளாவுக்கு சொந்தமானது. ஆனால் அணையை தமிழக பொதுப்பணித்துறைதான் கண்காணித்து வருகிறது.

லண்டனில் பென்னி குவிக் சிலை

இந்த அணையை கட்டியவர் ஜான் பென்னிகுவிக். இவருக்கு லண்டனில் சிலை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த, “கர்னல் ஜான் பென்னிகுவிக்”கின் புதிய சிலையை, அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவருடைய பிறந்த நாளன்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான லண்டன்-கேம்பர்ளி நகர மைய பூங்காவில் நிறுவ அனைத்து லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலை பெற்றுள்ளார்கள்.

ஆங்கிலேய பொறியாளரான ஜான் பென்னிகுவிக், தமிழக மக்களுக்காக கடின தியாகமான உழைப்பினாலும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தினாலும் பெரியாற்றின் குறுக்கே, பெரியாறு அணையை 1895-ம் ஆண்டு கட்டி முடித்து, தமிழகத்துக்கு குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய வழிவகை செய்தார். அந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே முற்றிலும் செழுமையடைந்து மாற்றங்கள் பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களில் தற்போது சுமார் 2,19,840.81 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன.

பிறந்தநாள்

ஆங்கிலேய அரசு இந்த திட்டத்துக்கு தொடர்ந்து நிதியுதவி செய்ய இயலாத சூழ்நிலையில், ஜான் பென்னிகுவிக் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக்கொண்டு எத்தகைய தடைகள் வந்தாலும், இந்த அணையை எப்படியாவது கட்டி முடிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடனும், மனஉறுதியுடனும், விடா முயற்சியுடனும், துணிவுடன் செயல்பட்டு பெரியாறு அணையை கட்டி முடித்துள்ளார்.

அவருடைய பிறந்த நாளான ஜனவரி 15-ந்தேதியை தமிழர்கள் விமரிசையாக கொண்டாடுகின்றனர். தேனி மாவட்ட மக்கள் ஜான் பென்னிகுவிக்கின் தியாக பணிகளை நினைவுகூரும் வகையில் அவருடைய பிறந்த தினத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறார்கள். மேலும், அந்த மாவட்ட மக்கள் தொடர்ந்து தங்களுடைய குழந்தைகளுக்கு அவருடைய பெயரை வைத்து நன்றித்தெரிவித்து மகிழ்ச்சி அடைகின்றார்கள்.

தமிழக உரிமையை விட்டுக்கொடுக்காமல்...

பென்னிகுவிக் நினைவைப்போற்றும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் மதுரை, தல்லாகுளம் பொதுப்பணித்துறை வளாகத்தில் 15.6.2000 அன்று அவருடைய உருவச்சிலையை திறந்து வைத்தார். தமிழக அரசு, தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் பகுதியில் வெண்கலத்திலான பென்னிகுவிக் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் ஒன்றை அமைத்தும், தேனி மாநகர பஸ் நிலையத்துக்கு பென்னிகுவிக்கின் பெயரையும் சூட்டியுள்ளது.

தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் மத்திய அரசின், நீர் ஆணையம் மற்றும் உயர் அமைப்புகளிடம் சட்டரீதியாக நுணுக்கமான கருத்துக்களை தெரிவித்து, வாதாடி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

தென் மாவட்ட மக்களின் நீண்டகால தண்ணீர் பிரச்சினையை கருத்தில்கொண்டு பெரும் போராட்டத்தில் பல்வேறு இன்னல்களை கடந்து கட்டப்பட்ட முல்லைப்பெரியாற்றின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை எந்நாளும் விட்டுக் கொடுக்காமல் காப்பதற்கு நமது அரசு தொடர் முயற்சி மேற்கொள்ளும் என்பதனையும் தியாகத் திருவுருவமான ஜான் பென்னிகுவிக் பிறந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story