சென்னிமலை சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.57 லட்சம் கையாடல் மேலாளர் உள்பட 3 பேர் கைது- பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னிமலையில் உள்ள சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.57 லட்சம் கையாடல் செய்ததாக மேலாளர் உள்பட 3 பேரை ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னிமலை
சென்னிமலையில் உள்ள சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.57 லட்சம் கையாடல் செய்ததாக மேலாளர் உள்பட 3 பேரை ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கணக்கு தணிக்கை
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் சென்டெக்ஸ் எனப்படும் சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான பண்டக சாலை சென்னிமலை அருகே எம்.பி.என் காலனியில் உள்ளது.
இது ஈரோடு சரக துணை பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த பண்டக சாலையில் கடந்த 1-4-2015 முதல் 31-3-2016 வரை நடை பெற்ற வரவு, செலவுகளின் உண்மை தன்மையினை கண்டறியும் வகையில் கணக்கு தணிக்கை செய்யப்பட்டது.
ரூ.57 லட்சம் கையாடல்
இந்த தணிக்கையில் அனைத்து வகை சங்க பதிவேடு ஆதாரங்கள் குறித்து கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 2015-2016-ம் ஆண்டில் பண்டக சாலையில் துணை விதிகளுக்கு முரணாக சுமார் ரூ.57 லட்சம் கையாடல் நடந்திருப்பது தெரிய வந்தது.
பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்க துணை பதிவாளர் நர்மதா மூலம் சென்னையில் உள்ள வணிக குற்றப்பிரிவு (புலனாய்வு பிரிவு) கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
3 பேர் கைது
அதன் அடிப்படையில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
விசாரணையில் சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் பண்டக சாலையில் ஸ்டோர் மேலாளராக பணிபுரிந்த சென்னிமலை அருகே உள்ள எம்.பி.என் காலனி, சரவணபுரியை சேர்ந்த கணேசன் வயது (வயது 55), பண்டக சாலையின் தலைவராக இருந்த முகாசிபிடாரியூர் 1010 நெசவாளர் காலனியை சேர்ந்த தேவராஜ் (61) மற்றும் விற்பனையாளராக இருந்த ரவிச்சந்திரன் (61) ஆகிய 3 பேர் ரூ.57 லட்சத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






