தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:46 PM GMT)

கூடலூரில் விவசாயியை தாக்கிய தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் தாலுகா தேவர்சோலை அருகே உளியம்மாஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 52), விவசாயி. முதுமலை ஊராட்சி முதுகுளியை சேர்ந்தவர் சிவக்குமார் (38). கங்காதரனும், சிவக்குமாரும் உறவினர்கள் ஆவர். கடந்த 2014-ம் ஆண்டு உளியம்மாஞ்சோலையில் 2 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார் ஒரு தடியை எடுத்து கங்காதரனின் கால் உள்பட பல இடங்களில் தாக்கினார். இதில் அவருக்கு காலில் அடிபட்டு எலும்பு உடைந்தது.

இதைத்தொடர்ந்து பலத்த காயமடைந்த கங்காதரனை அக்கம்பக்கத்தினர் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் தேவர் சோலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து சிவக்குமாரை கைது செய்து கூடலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில், குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சசின்குமார் தீர்ப்பளித்தார். மேலும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story