3 பேருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை


3 பேருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை
x

நீடாமங்கலம் கோவில் சிலை திருட்டு வழக்கில் தொடர்புடைய 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தஞ்சாவூர்

கும்பகோணம்:-

நீடாமங்கலம் கோவில் சிலை திருட்டு வழக்கில் தொடர்புடைய 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிலை திருட்டு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பெரம்பூர் கிராமத்தில் வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐம்பொன்னால் ஆன வெங்கடாசலபதி சிலை திருட்டு போனது.

இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

3 பேர் கைது

இந்த வழக்கு தொடர்பாக திருவாரூர் மாவட்டம் பள்ளிவாரமங்கலம் நடுத்தெருவை சேர்ந்த இந்திரஜித்(வயது 47), பூவனூர் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த ராஜ்குமார்(35), மன்னார்குடி சஞ்சீவிராயன்கோவில் தெருவை சேர்ந்த இளங்கோவன்(46) ஆகிய 3 பேரையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

3 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இந்திரஜித், ராஜ்குமார், இளங்கோவன் ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டார். இதனையடுத்து 3 பேரையும் திருச்சி மத்திய சிறைக்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

சிறை தண்டனை பெற்றுள்ள ராஜ்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீடாமங்கலத்தில் நடந்த கம்யூனிஸ்டு பிரமுகர் படுகொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story