தூத்துக்குடியில் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


தூத்துக்குடியில் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 6 July 2023 6:45 PM GMT (Updated: 6 July 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் வியாழக்கிழமை 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தூத்துக்குடி

பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

பலத்த காற்று

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருப்பதால் கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் இதமான சூழல் நிலவி வருகிறது. நேற்று லேசான வெயில், திடீர் மேகமூட்டம், அவ்வப்போது சாரல் மழை என்று இருந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதே நேரத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்றும் வீசி வருகிறது. நேற்று காலை முதலே காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. அதிகப்பட்சமாக மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். .

கடலுக்கு செல்ல தடை

பருவமழை காரணமாக தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதனால் கடந்த 4-ந்தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 3-வது நாளாக நேற்றும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், திரேஸ்புரம், இனிகோநகர், புதிய துறைமுகம், தாளமுத்துநகர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்திருந்தனர்.

மீனவர்கள் வேதனை

இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, 'இயற்கை சீற்றங்களால் அவ்வப்போது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. இந்த தடைக்காலம் முடிவடைந்து கடந்த 2 வாரங்களாகத்தான் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் இயற்கை மீண்டும் மீனவர்களை சோதிக்கத் தொடங்கி விட்டது. பலத்த காற்று காரணமாக விசைப்படகுகள் 3 நாட்களாக கடலுக்கு செல்லாமல் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன' என்று வேதனையுடன் தெரிவித்தனர்.


Next Story