612 பயனாளிகளுக்கு ரூ.46 கோடி கடனுதவி


612 பயனாளிகளுக்கு ரூ.46 கோடி கடனுதவி
x
தினத்தந்தி 30 Sep 2023 6:30 PM GMT (Updated: 30 Sep 2023 7:02 PM GMT)

அரியலூரில் நடந்த முகாமில் 612 பயனாளிகளுக்கு ரூ.46 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

அரியலூர்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக கடன் வசதியாக்க முகாம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் அரசு அலுவலகங்கள் மூலம் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும், வங்கி கிளையில் நிலுவையிலுள்ள விண்ணப்பங்கள் வங்கி மேலாளர்கள் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு கடன் ஆணையும், பட்டுவாடா ஆணையும் வழங்கப்பட்டது.

இந்த முகாமில் பயிர்க்கடன், தனிநபர் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், கால்நடை பராமரிப்பு கடன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் என மொத்தம் 612 பயனாளிகளுக்கு சுமார் ரூ.46 கோடியே 14 லட்சம் கடன் உதவிக்கான ஆணை கலெக்டர் மூலம் வழங்கப்பட்டது. மேலும், 2023-24-ம் ஆண்டில் அரியலூர் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் சிறப்பாக கடனுதவி வழங்கிய வங்கி கிளை மேலாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் நினைவு பரிசை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இலக்குவன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story