

திருவாரூர்,
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் குளிர்பானங்கள் அருந்துவதும், குளிர் பிரதேசங்களை தேடியும் சென்று வருகின்றனர்.இந்த நிலையில் கோடை வெயில் தாக்கத்தை தணிக்கும் வகையில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. அதன்படி திருவாரூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக சுமார் 5,000 ஏக்கர் எள் பயிர்கள் சேதமடைந்துள்ளன. எள் வயலில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாகுபடி செய்து பூத்து காய்க்கும் தருணத்தில் இருந்த எள் பயிர்களில் பாதிப்பு அடைந்துள்ளது. எள் பயிர்கள் மழை நீரில் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பாதிப்பு குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடப்பு மே மாதத்தில் இதுவரை 178 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 4-ந் தேதி மட்டும் 74 மில்லி மீட்டர் மழை பெய்தது. மானாவாரி இறவைப் பயிரான எள் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் அதிக அளவு நீர் தேங்கி இருப்பதால், பயிர் வாட ஆரம்பித்து விட்டது.