தஞ்சை அருகே அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போட்ட 10 மாத பெண் குழந்தை பலி என புகார்

அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போட்ட 10 மாத பெண் குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனை முன்பாக போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை அருகே அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போட்ட 10 மாத பெண் குழந்தை பலி என புகார்
Published on

தஞ்சை,

தஞ்சாவூர் மாவட்டம் மடிகை பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் - கீதா தம்பதியர். இவர்களுக்கு தரணிகா என்ற பத்து மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு பத்து மாத தடுப்பூசி போட வேண்டுமென துறையூர் அங்கன்வாடி மையத்தில் இருந்து தொலைபேசி மூலம் பெற்றோர்களை அழைத்துள்ளனர். இதனால், இன்று காலை கீதா குழந்தையை தூக்கி கொண்டு துறையூர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார்.

இந்நிலையில் தடுப்பூசி போட்ட வேகத்தில் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டு குழந்தை சுயநினைவு இழந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக அருகில் உள்ள காசவளநாடு புதூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை தூக்கி சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தைக்கு மேலும் 4 ஊசியை செலுத்தி உள்ளனர். இதனால் குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமானது. இதனையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவரின் காரிலேயே குழந்தையையும், பெற்றோரையும் அழைத்து கொண்டு தஞ்சை அரசு ராசமிராசுதார் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தாய் கீதா கூறகையில், தடுப்பூசி போட்ட வேகத்தில் குழந்தையின் உடல்நிலை மோசமானது. இதனையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றோம். அங்கேயும் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானது. மருத்துவரின் காரிலேயே தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அரசு மருத்துவமனையில் எங்களை இறக்கிவிட்ட வேகத்தில் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

எதுவும் புரியாமல் உள்ளே போய் மருத்துவரை சந்தித்தபோது குழந்தை இறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். தடுப்பூசி போடப்பட்டதால் தான் குழந்தை இறந்ததாகவும், எனவே இது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் இறப்பிற்கு உண்மையான காரணம் தெரியும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com