முட்டுக்காடு படகு குழாம் வளாகத்தில் 2 அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் - ரூ.5 கோடி மதிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது


முட்டுக்காடு படகு குழாம் வளாகத்தில் 2 அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் - ரூ.5 கோடி மதிப்பில் பிரமாண்டமாக உருவாகிறது
x

முட்டுக்காடு படகு குழாம் வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பில் பிரமாண்டமான 2 அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் கட்டுமான பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.

சென்னை

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவை படகுகள், எந்திர படகுகள், வேகமான எந்திர படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் மூலம் ரூ.5 கோடி மதிப்பில், தமிழ்நாட்டில் முதல் முறையாக மிதவை உணவக கப்பல் அமைக்கப்படுகிறது.

இதற்கான கட்டுமான பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் டாக்டர் சந்தரமோகன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. முதல் தளம் திறந்தவெளியாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் சமையலறை, சேமிப்பறை, கழிவறை மற்றும் எந்திர அறை அமைக்கப்பட உள்ளது. இந்த மிதவைக்கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய எந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. 2 அடுக்கு உணவக பயண கப்பலின் மொத்த நீளம் 125 அடி, அகலம் 25 அடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொது மேலாளர் பாரதி தேவி, கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஜோஜி செபஸ்தியான், ஒஜெஸ் செபஸ்தியான் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story