தொழில் முதலீடுகள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : மத்திய மந்திரி எல்.முருகன்


தொழில் முதலீடுகள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : மத்திய மந்திரி எல்.முருகன்
x
தினத்தந்தி 31 Jan 2024 9:00 PM GMT (Updated: 31 Jan 2024 9:00 PM GMT)

தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெறப்பட்ட தொழில் முதலீடுகள் தொடர்பாக விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.

சென்னை,

மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக முதல்-அமைச்சர் மகிழ்ச்சி பொங்க அறிவித்துள்ளார். இந்த முதலீடுகள் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் நிலை என்ன?, எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்ற விவரமும் இதுவரை சொல்லப்படவில்லை. ஸ்பெயின் நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றும், அதில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வெற்று அறிவிப்புகள் மூலமும், விளம்பரங்கள் மூலமும் நடந்து கொண்டிருக்கும் இந்த அவல ஆட்சியில் சாதனைகளை எப்படி மக்கள் எதிர்பார்க்க முடியும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது எப்போது? என்பதுதான் தமிழக மக்கள் முன்வைக்கும் கேள்வி.

எனவே தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெறப்பட்ட தொழில் முதலீடுகள் தொடர்பாக விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடு எவ்வளவு?, செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் என்னென்ன?, இரண்டரை ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வந்தவை எத்தனை?, இந்த புதிய முதலீடுகளால் எத்தனை ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்? என்ற விவரங்களை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

அதுபோலவே அரசு செலவில் இதுவரை சென்று வந்த வெளிநாட்டு பயணங்களில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் விவரங்களையும் வெளியிட வேண்டும். ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் முதலீடுகள் தற்போது எந்த அளவில் உள்ளது என்ற விவரத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும்.

ஆயிரம் கோடி, லட்சம் கோடி என வாய்க்கு வந்ததை சொல்லிக் கொண்டே இருந்தால் மக்கள் நம்பி விடுவார்கள் என தி.மு.க. அரசு பகல் கனவு காண்கிறது. ஆனால் இந்த வாய் சொல் வீரர்களை மக்கள் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு மத்திய மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.


Next Story