ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.600-க்கு விற்பனை


ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.600-க்கு விற்பனை
x
தினத்தந்தி 8 July 2023 6:45 PM GMT (Updated: 8 July 2023 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சியில் பூக்கள் விலை உயர்ந்ததை அடுத்து ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.600-க்கு விற்பனை ஆனது. அரும்பும் கிலோவுக்கு ரூ.200 அதிகரித்தது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

பூமார்க்கெட்

கள்ளக்குறிச்சியில் மளிகை மற்றும் காய்கறியின் விலை உயர்வை தொடர்ந்து தற்போது பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி-சேலம் மெயின்ரோட்டில் உள்ள காய்கறி கடைகளின் அருகே பூக்கடைகள் உள்ளன. இங்கு வியாபாரிகள் உள்ளூர் மட்டுமின்றி திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் பூக்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறாா்கள். கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகள் மற்றும் கோவில்களில் பூஜைக்கு தேவையான பூக்களை இங்கு வந்து வாங்கி செல்கிறார்கள்.

குண்டு மல்லி

இந்த நிலையில் பூமார்க்கெட்டுகளில் கடந்த ஒருவாரத்துக்கு பிறகு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட குண்டு மல்லி தற்போது கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரே வாரத்தில் இரு மடங்காக விலை உயர்ந்துள்ளது.

அதேபோல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கிலோ ரூ.300-க்கு விற்ற முல்லை அரும்பு ரூ.200 அதிகரித்து தற்போது கிலோ ரூ.500-க்கும், கடந்த 20 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.200-க்கு விற்பனையான பட்டன் ரோஸ் ரூ.300 உயர்ந்து கிலோ ரூ.500 ககு விற்பனை செய்யப்படுகிறது.

பன்னீர் ரோஸ்

சாமந்திப்பூ கடந்த ஒரு மாதமாக கிலோ ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்ட கோழிக்கொண்டை ரூ.60 உயர்ந்து ஒரு கிலோ ரூ.130 ஆகவும், கடந்த ஒருவாரத்திற்கு முன்பு ரூ.80-க்கு விற்பனையான சம்பங்கி ரூ.70 அதிகரித்து தற்போது ஒரு கிலோ ரூ.150-க்கும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.300 ஆக இருந்த பட்டன் ரோஸ் ரூ.200 உயர்ந்து கிலோ ரூ.500-க்கும், கிலோ ரூ.200 ஆக இருந்த பன்னீர் ரோஸ் ரூ.10 உயர்ந்து தற்போது கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விலை உயர்வுக்கான காரணம் குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, தற்போது குண்டுமல்லி, முல்லைஅரும்பு, பட்டன் ரோஸ் ஆகிய பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. பூக்களின் வரத்து அதிகரித்தால் விலை குறையும் என தெரிவித்தனர்.


Next Story