விக்கிரவாண்டி அருகே அரசு பஸ்சில் பயணித்த வக்கீல் திடீர் சாவு


விக்கிரவாண்டி அருகே அரசு பஸ்சில் பயணித்த வக்கீல் திடீர் சாவு
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:45 PM GMT)

விக்கிரவாண்டி அருகே அரசு பஸ்சில் பயணம் செய்த ஐகோர்ட்டு வக்கீல் திடீரென உயிரிழந்தார்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

ஐகோர்ட்டு வக்கீல்

சென்னை வேளச்சேரி வி.ஜி.பி. செல்வா நகரை சேர்ந்தவர் ரவி ஆனந்த் (வயது 45). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருந்து வந்தார். இவரது மனைவி வினித்ரா. இவர் சென்னை தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி ரவி ஆனந்த் சென்னையில் இருந்து மதுரைக்கு தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து திரும்பி சென்னைக்கு ஒரு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.

பஸ்சில் ராமநாதபுரத்தை சேர்ந்த பாரதிதாசன் என்பவர் டிரைவராகவும், எஸ்.வி. மங்கலத்தை சேர்ந்த சந்திரமோகன் என்பவர் கண்டக்டராகவும் பணியில் இருந்தனர்.

நெஞ்சு வலியால் சாவு

அதிகாலை 5.45 மணி அளவில் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரு ஓட்டலில் பஸ் நின்றது. அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த ரவி ஆனந்திற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதை பார்த்த சக பயணிகள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது ஆம்புலன்சில் வந்த டாக்டர்கள் அவரை சோதனை செய்தபோது ஏற்கனவே ரவிஆனந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் ரவி ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story