கத்திப்பாரா மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


கத்திப்பாரா மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x

கத்திப்பாரா மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை

சென்னையை அடுத்த பரங்கிமலை மத்தியாஸ் நகரை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 59). இவர் தனது மனைவி, மகள் ஆகியோருடன் பெசன்ட் நகரில் உள்ள தேவாலயத்துக்கு நேற்று சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். கத்திப்பாரா மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது, திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனே மோட்டார் சைக்கிளை பாலத்தின் ஓரம் நிறுத்தினார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி மோட்டார் சைக்கிள் முழுவதும் பற்றி எரிந்தது. இதைக்கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கத்திப்பாரா பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிண்டி தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். இதுகுறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story