மின்கம்பி உரசியதில் குளித்தலை வாலிபர் சாவு


மின்கம்பி உரசியதில் குளித்தலை வாலிபர் சாவு
x

மின்கம்பி உரசியதில் குளித்தலை வாலிபர் உயிரிழந்தார்.

திருச்சி

வெல்டர்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேல்நங்கவரம் கீழத்தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன் அங்கமுத்து(வயது 27). இவர் வெல்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அங்கமுத்து நேற்று மாலை திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பகுதியில் உள்ள ஒரு அடகு கடைக்கு சென்று நகையை அடகு வைத்தார்.

பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்புவதற்காக சிறுகமணி மலையப்பன் நகர் புது ரோடு வழியாக தன்னுடைய மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுகமணி பகுதியை சேர்ந்த கரிகாலன் என்பவரின் வாழைத் தோட்டத்தில் உள்ள மின்கம்பி அறுந்து விழுந்து, வாழைக்கன்றின் கீேழ கிடந்த சருகுகளில் தீப்பற்றி எரிந்தது.

மின்சாரம் பாய்ந்து சாவு

இதைக்கண்ட அங்குசாமி, மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, தீயை அணைக்க வாழை தோட்டத்திற்குள் சென்றார். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள், அதைக்கண்டு பெட்டவாய்த்தலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அங்கமுத்துவின் தந்தை ராமமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story