ஆன்லைன் மூலம் பழகி 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் - போக்சோ சட்டத்தில் கைது


ஆன்லைன் மூலம் பழகி 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் - போக்சோ சட்டத்தில் கைது
x

ஆன்லைன் மூலம் பழகி 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சென்னை

திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, திருவேற்காட்டில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் விளையாட்டு மூலம் செங்கல்பட்டு அடுத்த கொள்ளுமேடு அமனம்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற ஜோக்கர் விக்கி (வயது 26) என்பவர் அறிமுகம் ஆகி, பழகி வந்தார்.

இதற்கிடையில் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறிய விக்னேஷ், சிறுமியை ஆபாசமாக வீடியோ காலில் பேச வற்புறுத்தி அதனை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். பின்னர் அந்த வீடியோவை காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். கடந்த மாதம் சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் சிறுமியின் வீடு புகுந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அந்த நேரம் வீட்டுக்கு திரும்பி வந்த சிறுமியின் பெற்றோர், தனது வீட்டில் விக்னேஷ் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போதுதான் சிறுமி நடந்த விவரங்களை பெற்றோரிடம் கூறி அழுதார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் தட்டிக்கேட்டதற்கு விக்னேஷ், "நீங்கள் என்னை ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் மகளின் ஆபாச வீடியோக்கள் என்னிடம் உள்ளது. ரூ.50 லட்சம் கொடுத்தால் அந்த வீடியோக்களை அழித்து விடுவேன். இல்லை என்றால் அவற்றை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன். இதுபற்றி போலீசில் புகார் செய்தால் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை கொலை செய்து விடுவேன்" என மிரட்டினார்.

இதுபற்றி சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவொற்றியூர் பகுதியில் இருந்த விக்னேசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story