வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது


வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது
x

வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

துறையூர்:

துறையூரை அடுத்த புலிவலம் அருகே உள்ள மணியம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் போதுமணி(வயது 40). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் அவர் வீட்டை பூட்டிவிட்டு மறைவான ஒரு இடத்தில் சாவியை வைத்துவிட்டு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் வீட்டிற்கு அவர் திரும்பி வந்தபோது மர்ம நபர் ஒருவர், போதுமணி வீட்டில் மறைவான இடத்தில் வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டு கதவை திறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அப்பகுதி மக்களுடன் சேர்ந்து, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபரை மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி உள்ளார். இதையடுத்து பொதுமக்கள் வீட்டின் கதவை தாழிட்டனர்.

மேலும் இது குறித்து மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு வந்து அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூரை சேர்ந்த பொன்னர்(36) என்பதும், அவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் அவரிடம் இருந்து 4 பவுன் நகையை இன்ஸ்பெக்டர் பறிமுதல் செய்தார். இதையடுத்து நேற்று பொன்னரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story