குரூப்-1 தேர்வு எழுத அரசு பஸ்சில் சென்ற வாலிபர் விபரீத சாவு: படிக்கட்டில் பயணித்ததால் சுங்கச்சாவடி கம்பி மோதி உயிரிழப்பு


குரூப்-1 தேர்வு எழுத அரசு பஸ்சில் சென்ற வாலிபர் விபரீத சாவு: படிக்கட்டில் பயணித்ததால் சுங்கச்சாவடி கம்பி மோதி உயிரிழப்பு
x

குரூப்-1 தேர்வு எழுத அரசு பஸ் படிக்கட்டில் நின்று பயணித்த வாலிபர், சுங்கச்சாவடியில் உள்ள இரும்பு கம்பி மோதி உயிரிழந்த விபரீத சம்பவம் நேர்ந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் தண்டிராதேவிபட்டினம்பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் பாண்டியன். இவருடைய மகன் கோபாலகிருஷ்ணன் (வயது30).

இவர் நேற்று நடந்த குரூப்-1 தேர்வு எழுத பரமக்குடியில் இருந்து அரசு பஸ்சில் ஏறி ராமநாதபுரத்தை நோக்கி சென்றுள்ளார்.

பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த பஸ்சின் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளார்.

அந்த பஸ் சத்திரக்குடி சுங்கச்சாவடியில் சென்றபோது, அங்கிருந்த இரும்பு கம்பி இவரது மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். பஸ்சில் இருந்த பயணிகள் அலறினார்கள்.

உடனே பஸ் அங்கு நிறுத்தப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இறந்த கோபாலகிருஷ்ணனுக்கு திருமணமாகி மனைவி கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவரது மனைவிக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் இறந்ததை அறிந்து அவரது கர்ப்பிணி மனைவி கதறியது பார்க்க பரிதாபமாக இருந்தது.


Next Story