அலகு குத்தும் தொழிலாளி மண் வெட்டியால் அடித்து கொலை


அலகு குத்தும் தொழிலாளி மண் வெட்டியால் அடித்து கொலை
x
தினத்தந்தி 4 July 2023 7:25 PM GMT (Updated: 5 July 2023 7:46 AM GMT)

காவேரிப்பாக்கம் அருகே அலகு குத்தும் தொழிலாளி மண்வெட்டியால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

அலகு குத்தும் தொழிலாளி

காவேரிப்பாக்கத்தை அடுத்த கடப்பேரி அசோக் நகரில் வசித்து வந்தவர் மாரிமுத்து (வயது 55). இவர் கோவில் திருவிழாக்களில் அலகு குத்தும் தொழில் செய்துவந்தார். இந்தநிலையில் நேற்று காலை இவரது வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் தும்பு (53) என்பவரின் வீடுகட்டும் பணி நடைபெற்றது. அப்போது சிமெண்டு கலவை மாரிமுத்து வீட்டின் மீது விழுந்துள்ளது.

இதனால் மாரிமுத்து, தும்பு ஆகியோர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்பு கைகலப்பாக மாறியது. அப்போது தும்புவும் அவரது மனைவி யாகவள்ளியும் சேர்ந்து மண் வெட்டியால் மாரிமுத்துவை தாக்கியதாக கூறப்படுகிறது.

கணவன்- மனைவி கைது

இதில் அவர் மயங்கிவிழுந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரிமுத்து ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தும்பு, அவரது மனைவி யாகவள்ளி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


Next Story