பழனி அருகே வாலிபர் சரமாரியாக அடித்துக்கொலை


பழனி அருகே வாலிபர் சரமாரியாக அடித்துக்கொலை
x
தினத்தந்தி 13 Oct 2023 9:45 PM GMT (Updated: 13 Oct 2023 9:45 PM GMT)

பழனி அருகே வாலிபர் சரமாரியாக அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

பழனி அருகே வாலிபர் சரமாரியாக அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

வாலிபர் பிணம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூர் அண்ணாநகரை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகன் சிவக்குமார் (வயது 20). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் சிவக்குமார் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை மானூர் சண்முகநதி ஆற்றுப்பால பகுதியில் சிவக்குமார் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை அறிந்ததும் அவரது பெற்றோர், உறவினர்கள் அங்கு சென்றனர். அப்போது பிணமாக கிடந்த மகனை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு சிவக்குமாரின் தலை, முகம் ஆகிய இடங்களில் ரத்த காயம் இருந்தது. இதையடுத்து சிவக்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடித்துக்கொலை

பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சிவக்குமாரை மர்மகும்பல் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்?, சண்முகநதி ஆற்றுப்பால பகுதியில் வைத்து சிவக்குமாரை கொலை செய்தார்களா? அல்லது வேறு பகுதியில் வைத்து கொலை செய்துவிட்டு உடலை சண்முகநதி பாலத்தில் வீசி சென்றார்களா? என்பது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மானூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story