கனகம்மாசத்திரம் அருகே விபத்து - கார்கள் நேருக்கு நேர் மோதல்; 9 பேர் படுகாயம்


கனகம்மாசத்திரம் அருகே விபத்து - கார்கள் நேருக்கு நேர் மோதல்; 9 பேர் படுகாயம்
x

திருவள்ளூர் அருகே கனகம்மாசத்திரத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவள்ளூர்

சென்னை மகாத்மா காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 28). குடும்பத்துடன் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய காரில் சென்றார். தரிசனத்தை முடித்துவிட்டு திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது கனகம்மாசத்திரம் அடுத்து புதூர் அருகே திருப்பதியை நோக்கி வந்த கார் ஒன்று டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தடுமாறியது.

இதனால் தறிகெட்டு ஓடி முன்னே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. எதிர்பாராமல் நேர்ந்த இந்த விபத்தில் 2 கார்களின் முன்பகுதியும் அப்பளம்போல் நொறுங்கின. விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்க துரிதமாக போராடினர். இந்த கோர விபத்தில் செந்தில், அவர் குடும்பத்தை சேர்ந்த நாகலட்சுமி (28), சிவபாலன் (18), அய்யனார் (21), அக்ஷயா (18) உள்ளிட்ட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

திருப்பதி நோக்கி சென்ற காரில் பயணம் செய்த முரளி (43) உள்பட நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story