சென்னையில் ஓடும் பஸ்சில் பலகை உடைந்து விபத்து..கீழே விழுந்த பெண் காயம்; பயணிகள் அலறல்


சென்னையில் ஓடும் பஸ்சில் பலகை உடைந்து விபத்து..கீழே விழுந்த பெண் காயம்; பயணிகள் அலறல்
x

சென்னை அமைந்தகரை அருகே அரசு பஸ்சில் திடீரென பலகை உடைந்து ஓட்டை ஏற்பட்டது. இதில் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த பெண் பயணி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

சென்னை,

சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகருக்கு தடம் எண் 59 என்ற மாநகர பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் சென்னை அமந்தகரை பகுதியில் மதியம் சென்று கொண்டிருந்தது. பஸ்சின் பின் சீட்டில் 27 வயதான இளம்பெண் ஒருவர் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார். என்.எஸ்.கே நகர் அருகே பஸ் வந்த போது பஸ்சில் பின் இருக்கை அருகே பலகை உடைந்து பெரிய ஓட்டை ஏற்பட்டது. இதில் பின் சீட்டில் இருந்த , 27-வயதான பெண் பயணி நிலை தடுமாறி கீழே விழுந்து தொங்கினார்.

இதைப்பார்த்த சக பயணிகள் அலறினர். அலறல் சத்தம் கேட்டதால் உடனடியாக பஸ்சை டிரைவர் நிறுத்தினார். இதையடுத்து விரைந்து சென்ற சக பயணிகள் இளம்பெண்ணை மீட்டனர். பஸ்சை உடனடியாக டிரைவர் நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. லேசான காயம் அடைந்த பெண் பயணி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பஸ்சில் பலகை உடைந்து பெண் பயணி காயம் அடைந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மாநகர பஸ்சில் பலகை உடைந்து பயணி கீழே விழுந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story