பட்டாசு ஆலைகள் லாப நோக்கில் செயல்படுவதால் விபத்து ஏற்படுகிறது - சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கம்


பட்டாசு ஆலைகள் லாப நோக்கில் செயல்படுவதால் விபத்து ஏற்படுகிறது - சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கம்
x
தினத்தந்தி 23 March 2023 6:06 AM GMT (Updated: 23 March 2023 6:06 AM GMT)

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக காங். குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் கடந்த 20-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று உகாதி என்பதால் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் தொடங்கியது. சட்டசபை தொடங்கியதும் சபாநாயகர் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராமுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து உறுப்பினர்கள் சில நொடிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காங். குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார்.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறுகையில்,

"சிறிய பட்டாசு ஆலைகள் லாப நோக்கத்தை மட்டுமே வைத்து பணி செய்யும் காரணத்தால் மட்டுமே விபத்து ஏற்படுகிறது. பட்டாசு ஆலை அதிபர்களை அழைத்து கருத்தரங்குகளை அரசு நடத்தியுள்ளது. காஞ்சிபுரம் விபத்து தொடர்பாக இழப்பீடும், உரிய சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்ந்து நடக்கக்கூடாது என்றும் பட்டாசு ஆலை வெடிவிபத்து எப்படி நிகழ்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என சட்டசபையில் பாமக சட்டமன்றக் குழுத்தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தினார்.


Next Story