செங்கல்பட்டு மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகள் இருப்பில் உள்ளன அதிகாரி தகவல்


செங்கல்பட்டு மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகள் இருப்பில் உள்ளன அதிகாரி தகவல்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகள் இருப்பில் உள்ளன என்று வேளாண் அதிகாரி தெரிவித்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆர்.அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாரம்பரிய நெல் ரகங்கள் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 20 மாநில அரசு விதை பண்ணைகளில் 300 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.

அதனை தொடர்ந்து பாரம்பரிய நெல் ரகங்களின் வினியோக இலக்காக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 7.42 மெட்ரிக் டன் நிர்ணயிக்கப்பட்டு, மாநிலத்தில் பல்வேறு மாநில அரசு விதை பண்ணைகளிலிருந்து பாரம்பரிய நெல் ரக விதைகள் பெறப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகம் செய்யப்பட உள்ளது.

இந்த விதைகளானது 2023-24 ம் நிதியாண்டில் கிலோ ஒன்றுக்கு ரூ.50 நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் இந்த மாவட்டத்திலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது.

மொத்த விதையளவில் 80 சதவீத அளவில் பொது பிரிவு விவசாயிகளுக்கும் 20 சதவீத பட்டியல் இன, பழங்குடியினர் இன விவசாயிகளுக்கும் வழங்கப்படும். விவசாயி ஒருவருக்கு 10 கிலோ விதைகள் மட்டுமே வழங்கப்படும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகளுக்கும், பட்டியலின, பழங்குடியினர் இனத்தை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

பாரம்பரிய நெல் ரகங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடலுக்கு வலிமை சேர்க்கும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளதால், பாரம்பரிய நெல் ரக அரிசியை உண்ணும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. தற்போது செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் தூயமல்லி, சீரகசம்பா, மாப்பிள்ளை சம்பா, செங்கல்பட்டு சிறுமணி போன்ற பாரம்பரிய நெல் ரக விதைகள் இருப்பில் உள்ளன. எனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை அலுவலர்கள் அல்லது வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பாரம்பரிய நெல் விதைகளை பெற்று பயனடையுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story