தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 90 நிறுவனங்கள் மீது நடவடிக்கை


தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 90 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Oct 2022 6:45 PM GMT (Updated: 3 Oct 2022 3:29 PM GMT)

காந்தி ஜெயந்தி தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 90 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

காந்தி ஜெயந்தி தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 90 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடாசலபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காந்தி ஜெயந்தி

தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் மற்றும் விதிகளின் படி, தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினமான நேற்று முன்தினம் கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு விடுமுறை அளிக்கப்படாத பட்சத்தில், அன்றைய தினம் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அல்லது விடுப்பு அனுமதித்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு அறிவிப்பு அளித்து, அதன் நகலினை தொழிலாளர் துணை உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்பி விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் அதனை காட்டி வைக்க வேண்டும்.

90 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கடைகள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு ஆய்வின் போது 56 கடைகள், 60 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 116 நிறுவனங்களில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

இதில் சட்ட விதிமுறைகளை பின்பற்றாத 37 கடைகள், 53 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 90 நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story