ஆருத்ரா பண மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜர்


ஆருத்ரா பண மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜர்
x

ஆர்.கே.சுரேஷிடம், ஏ.டி.எஸ்.பி.வேல்முருகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை,

ஆருத்ரா கோல்ட் நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக்கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மோசடியில் திரைப்பட நடிகர்- தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதை திரும்பப் பெறக்கோரி, ஆர்.கே. சுரேஷ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆருத்ரா மோசடிக்கும், தனக்கும் தொடர்பில்லை எனவும், மனைவி, குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக துபாயில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இதற்கிடையில் துபாயிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பிய ஆர்.கே.சுரேஷிடம் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது நீதிமன்ற உத்தரவின்படி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஆஜராக வந்திருப்பதாக அவர்களிடம் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்தார். பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அவருக்கு குடியுரிமை அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.

இந்த நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள மாநில பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆர்.கே.சுரேஷ் ஆஜராகி உள்ளார். அவரிடம் ஏ.டி.எஸ்.பி.வேல்முருகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.சுரேஷ், தான் தலைமறைவாகவில்லை என்றும், விசாரணைக்குப் பின் செய்தியாளர்களை சந்திப்பேன் என்றும் கூறினார்.


Next Story