நடிகை விஜயலட்சுமி புகார்: சீமானுக்கு 2-வது முறையாக போலீசார் சம்மன்


நடிகை விஜயலட்சுமி புகார்: சீமானுக்கு 2-வது முறையாக போலீசார் சம்மன்
x

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமானுக்கு 2வது முறையாக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சென்னை,

நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் கடந்த மாதம் மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி இதுகுறித்து மீண்டும் பரபரப்பு புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள், நடிகை விஜயலட்சுமியிடம் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து பல மணி நேரம் விசாரணை செய்தார். பின்னர் திருவள்ளூரில் உள்ள மகிளா கோர்ட்டு மாஜிஸ்திரேட் முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது பலமுறை கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி தெரிவித்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமிக்கு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் போலீசார், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சீமானுக்கு சம்மன் அளித்தனர். ஆனால் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக அவரது வழக்கீல்கள் 6 பேர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2-வது முறையாக சம்மன் வழங்கப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு சென்ற வளசரவாக்கம் போலீசார் சம்மனை வழங்கினர். ஆனால் சீமான் தரப்பு சம்மனை வாங்க மறுத்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களை தருமாறு சீமானின் வழக்கறிஞர் காவல் நிலையத்தில் கேட்ட நிலையில் மீண்டும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நடிகை விஜயலட்சுமி மீது மானநஷ்ட வழக்கு தொடர சீமான் தரப்பு முடிவு என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story