கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1¼ கோடியில் கூடுதல் கட்டிடம்


கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1¼ கோடியில் கூடுதல் கட்டிடம்
x

கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1¼ கோடியில் கூடுதல் கட்டிடம் கட்ட அமைச்சர் மெய்யநாதன், ப.சிதம்பரம் எம்.பி. ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

புதுக்கோட்டை

அடிக்கல் நாட்டு விழா

ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1¼ கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நேற்று நடந்தது. இதில், திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி, ஆலங்குடி தாசில்தார் பெரியநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். விழாவில் ப.சிதம்பரம் எம்.பி. பேசும்போது கூறியதாவது:-

கூடுதல் டாக்டரை நியமிக்க வேண்டும்

கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தால் சுமார் 40 ஆயிரம் மக்கள் பயனடைவார்கள். பெரிய பணிகளுக்கு மட்டுமே மாநிலங்களவை நிதியை ஒதுக்கி வருகிறேன். அதிலும், கல்வி மற்றும் சுகாதாரத்துக்கே முன்னுரிமை அளித்து நிறைவேற்றி வருகிறேன். அதுதான் காலாகாலத்துக்கு நிலைத்த பயன் தரும். திருமயத்தில் கூட ரூ.2 கோடியில் நூலகம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்படும் மருத்துவமனை கட்டுமான பணிகளை மாதத்துக்கு ஒரு முறை வந்து ஆய்வு செய்வேன். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒரு டாக்டர் மட்டுமே உள்ளார். எனவே இங்கு கூடுதலாக ஒரு பெண் டாக்டரை நியமிக்க அமைச்சரும், மாவட்ட கலெக்டரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஊட்டச்சத்து பெட்டகங்கள்

இதையடுத்து, அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதன்படி கொத்தமங்கலத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் மருத்துவ அறை, அவசர வார்டு, ஆய்வகம் உள்ளிட்டவை 257.65 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. இதன்மூலம் இப்பகுதி மக்கள் மருத்துவத்திற்கு நீண்டதூரம் சென்று வருவது தவிர்க்கப்பட்டு தங்களின் வீடுகளுக்கு அருகாமையிலேயே மருத்துவ வசதி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சர் மெய்யநாதன், ப.சிதம்பரம் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

விழாவில் ஆலங்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், அறந்தாங்கி துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) நமச்சிவயம், ஆலங்குடி நகர செயலாளர் அரங்குலவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செங்கோடன், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருமயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புராம் வரவேற்றார். முடிவில் கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வளர்மதி நன்றி கூறினார்.


Next Story