சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு த.மா.கா. நிர்வாகிகள் வாழ்த்து


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு த.மா.கா. நிர்வாகிகள் வாழ்த்து
x

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு த.மா.கா. நிர்வாகிகள் வாழ்த்து

ஈரோடு

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. அதைத்தொடர்ந்து நேற்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகளை ஆய்வு செய்ய முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வந்தார். அவர் வில்லரசம்பட்டியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினார்கள்.

இதுபோல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முக்கிய நிர்வாகிகள் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். த.மா.கா. இளைஞர் அணி மாநில தலைவர் எம்.யுவராஜா, கட்சியின் பொதுச்செயலாளர் விடியல் எஸ்.சேகர் ஆகியோர் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்தும், இனிப்பு ஊட்டியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக த.மா.கா. நிர்வாகிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story