நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சந்திப்பு


நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சந்திப்பு
x
தினத்தந்தி 24 Feb 2024 5:33 PM GMT (Updated: 25 Feb 2024 12:55 AM GMT)

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாசை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சந்தித்தார்.

திண்டிவனம்,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து அனைத்து கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் தங்கள் தலைமையில் பிரமாண்ட கூட்டணி அமைக்க அ.தி.மு.க. முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கான நடவடிக்கைகளில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாசை இன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி. சண்முகம் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.


Next Story