அ.தி.மு.க. பிரச்சினைக்கு பா.ஜ.க.வே காரணம்- நாஞ்சில் சம்பத்


அ.தி.மு.க. பிரச்சினைக்கு பா.ஜ.க.வே காரணம்- நாஞ்சில் சம்பத்
x

அ.தி.மு.க.வில் நடைபெறும் பிரச்சினைக்கு பா.ஜ.க.வே காரணம் என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

நாஞ்சில் சம்பத்

திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. பூந்தமல்லி தொகுதி இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் நாசர், தி.மு.க. நிர்வாகி தமிழன் பிரசன்னா, நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள். இதில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, பூந்தமல்லி ஒன்றியக்குழு தலைவர் ஜெயக்குமார், இளைஞரணி நிர்வாகிகள் பிரபு கஜேந்திரன், ஜெரால்டு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் நாஞ்சில் சம்பத் கூறியதாவது:-

பா.ஜ.க.வின் கொள்கை

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டுவதாக கருதி கொண்டிருக்கிறார்கள். ஒரு ஜனநாயக அநீதியை அரங்கேற்றி இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி இடைச்சறுக்கலாக வந்தவர். ஐகோர்ட்டு தீர்ப்பு கண்டுகொள்ளப்படவில்லை என்பதைவிட அதன் மீது அத்துமீறலை நடத்தி இருக்கிறார்கள்.

இதற்கு பின்னால் பா.ஜ.க. விளையாட்டு இருக்கிறது என்பதை நாடு புரிந்து கொண்டிருக்கிறது. இன்று மராட்டியத்தில் செய்கிற வேலையை நாளை தமிழகத்தில் அவர்கள் செய்வார்கள். செல்வாக்கு உள்ள கட்சியை உடைப்பதும், உருக்குலைப்பதும், ஊடுருவுவதும் பா.ஜ.க.வின் கொள்கை. அதற்கு அ.தி.மு.க.வும் பலியாகி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story