'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தப்பட்ட பின்னர் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் பணி நடைமுறைப்படுத்தப்படும்


ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின்னர் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் பணி நடைமுறைப்படுத்தப்படும்
x

‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்தப்பட்ட பின்னர் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் பணி நடைமுறைப்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

சென்னை,

மின் ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், 23 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் அறிவித்துள்ளனர். அந்த சங்க பிரதிநிதிகள் நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அவர்களுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

மின்சார கட்டணம் சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. கட்டணமில்லாமல் வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரத்தை வேண்டாம் என நினைப்பவர்கள் கணக்கீட்டாளர் அளிக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம். 100 யூனிட் மின்சாரம் இலவசமாகவும், 100 யூனிட்டுக்கு மேல் 200 யூனிட்டுக்குள் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசிற்கு ரூ.3,496 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

`ஸ்மார்ட் மீட்டர்'

புதைவிட கம்பிகள் அமைக்கும் பணி ரூ.1,200 கோடியில் நடைபெற்று வருகிறது. பருவ மழைக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வீடுகளில் மின்சாரம் கணக்கிடுவதை எளிமையாக்கும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மீட்டர்கள் கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்தபின், வீடுகள் தோறும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு, மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் பணி தொடங்கப்படும்.

கட்டாயம்

நிலக்கரி தற்போது 143 டாலருக்கு கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், விலையை உயர்த்தி 203 டாலருக்கு கொள்முதல் செய்ய மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

குறைந்தபட்சம் 10 சதவீத நிலக்கரியை மத்திய அரசிடம் இருந்து கட்டாயம் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை எழுந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story