மீண்டும் உயர்ந்த சின்ன வெங்காயம், பல்லாரி விலை


மீண்டும் உயர்ந்த சின்ன வெங்காயம், பல்லாரி விலை
x

தஞ்சையில், சின்னவெங்காயம், பல்லாரி விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்

காய்கறி மார்க்கெட்

தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தஞ்சை மார்க்கெட்டிற்கு மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், தேனி, சிவகங்கை, நிலக்கோட்டை, திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

மேலும் இங்கிருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், திருவையாறு, ஒரத்தநாடு மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

வெங்காயம் விலை கடும் உயர்வு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக தக்காளி கிலோ ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. அதே போல் சின்ன வெங்காயமும் கிலோ ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. தஞ்சை மார்க்கெட்டுக்கு பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த நிலையில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை சீசன் தொடங்கியதையடுத்து விலை குறையத்தொடங்கியது. சின்ன வெங்காயத்தின் வரத்து தற்போது குறைவாக இருப்பதால் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதாவது நேற்று ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.20 உயர்ந்துள்ளது. விலை உயர்வு காரணமாக விற்பனையும் குறைந்து காணப்பட்டது.

இல்லத்தரசிகள் அதிர்ச்சி

கர்நாடகாவில் இருந்து வரத்து குறைந்தாலும், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் விளைச்சல் குறைந்ததாலும் இந்த விலை உயர்வு காணப்படுகிறது. இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.30 முதல் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட பல்லாரி நேற்று கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெளிமாநிலங்களில் இருந்து வரத்து இல்லாததால் இந்த விலையேற்றம் காணப்படுகிறது. இருப்பு வைக்கப்பட்டுள்ள பல்லாரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

இதுகுறித்து வெங்காய வியாபாரிகள் கூறுகையில், தஞ்சைக்கு அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து தான் அதிக அளவில் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வரும். அங்கு தற்போது அறுவடை முடிந்து இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயம் தான் விற்பனைக்கு வருகிறது. இதே போல் பெங்களூருவில் மழை காரணமாக சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் அங்கிருந்து வரத்தும் குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரிக்க தொடங்கி விட்டது.

மேலும் தற்போது வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளதால் தஞ்சைக்கு வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து இல்லை. தற்போது இருப்பு வைக்கப்பட்டு இருந்த வெங்காயம் தான் விற்பனைக்கு வருகிறது. இதனால் இந்த விலையேற்றம் காணப்படுகிறது என்றனர்.


Next Story