பாஜக கூட்டணியில் இருக்க கூடாது என்பதை உணர்ந்துதான் அதிமுக முடிவு - அமைச்சர் துரைமுருகன்


பாஜக கூட்டணியில் இருக்க கூடாது என்பதை உணர்ந்துதான் அதிமுக முடிவு - அமைச்சர் துரைமுருகன்
x
தினத்தந்தி 26 Sep 2023 6:21 AM GMT (Updated: 26 Sep 2023 8:43 AM GMT)

பாஜக கூட்டணியில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்துதான் அதிமுக இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

சென்னை,

சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கடைசி தீர்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவம் என்ன சொல்கிறதோ அதை பின்பற்ற வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடத்தப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டின் தனித்தன்மை என்னவாகும்? என்பதை அரசியல் தெளிவு தெரிந்தவர்கள் உணர வேண்டும்.

தங்கள் கருத்துக்கு எதிர்ப்பு வருகிறது, அதனை எப்படி கட்டுப்படுத்த வேண்டும்? என்பதை சுப்ரீம் கோர்ட்டு தீர்மானிக்க வேண்டும். காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டிற்குத் தேவையான 12,500 கன அடி தண்ணீர் வேண்டுமென்று வற்புறுத்துவோம்.

பாஜக கூட்டணியில் இருக்க கூடாது என்பதை உணர்ந்து தான் அதிமுக முடிவு எடுத்துள்ளது. அதிமுக கூட்டணி முறிவு, அவர்கள் வீட்டில் நடப்பது, அதைப் பற்றி நாம் கருத்து கூற முடியாது. அதிமுக பாஜக கூட்டணியில் இருக்க வேண்டுமா? இருக்கக்கூடாதா என்பதை அந்த கட்சி தலைவர்கள் உணர வேண்டும். அதிமுகவினர் உணர்ந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story