அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து அதிமுக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு


அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து அதிமுக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 22 Jun 2023 6:47 AM GMT (Updated: 22 Jun 2023 9:01 AM GMT)

அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து அதிமுக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

சென்னை,

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். அதேநேரத்தில் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்து வந்த மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை ஆகிய துறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி இலக்கா இல்லாத அமைச்சராக தொடர கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரக்கூடாது என கவர்னர் குறிப்பிட்ட பிறகும் தமிழக அரசு செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என அரசாணை வெளியிட்டது. இதையடுத்து தமிழக அரசு துறைகளுக்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், செந்தில் பாலாஜியை அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவருக்கு அளிக்கப்பட்டு இருந்த இலாகாக்களின் பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையில் 21-வது அமைச்சர் என்ற செந்தில்பாலாஜியின் மூப்பின் நிலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வதை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜிக்கு எதிராக அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் "செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதை கவர்னர் அங்கீகரிக்கவில்லை. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வதால் அரசு பணம் வீணாவதாகவும், எந்த அடிப்படையில் அவர் அமைச்சராக நீடிக்கிறார். செந்தில்பாலாஜி மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. செந்தில்பாலாஜி அமைச்சராக இருப்பதால், நீதிமன்றக் காவலில் இருக்கும்போது ரகசிய கோப்புகளை அணுக இயலும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story