ஒரே நாடு ஒரே தேர்தலால் அதிமுக 'பலிகடா' ஆகும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்


ஒரே நாடு ஒரே தேர்தலால் அதிமுக பலிகடா ஆகும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
x
தினத்தந்தி 3 Sep 2023 5:37 AM GMT (Updated: 3 Sep 2023 6:10 AM GMT)

யாரின் காலிலும் விழுந்து பதவி பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

சென்னையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இந்தியா கூட்டணியின் 3 கூட்டங்களை பார்த்து பயந்து போய் நாடாளுமன்றத்தை பாஜக அரசு கூட்டியுள்ளது. திமுக குடும்பமாக செயல்படுவது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒரு சதி திட்டத்தை தீட்டி அதிபராக இருக்க முயற்சி செய்கிறார்கள். தான் அதிபராக வேண்டும் என்ற நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு செயல்படுகிறார். அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்துவிட்டு தற்போது ஆதரிக்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தலால் அதிமுக 'பலி கடா' ஆகும், அது புரியாமல் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியா கூட்டணி என்றாலே பாஜகவுக்கு அச்சம் வந்துவிடுகிறது. இந்தியாவை காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக முன்னாள் குடியரசுத்தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல்' குழுவில் அனைத்து கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.

தேர்தல் செலவை குறைக்கிறீர்களோ, இல்லையோ கொள்ளையடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். சட்டசபையில் ஆட்சி கவிழ்ந்தால், அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரும் வரை தேர்தல் நடத்தாமல் காத்திருப்பீர்களா?. கழகம் தான் குடும்பம், குடும்பம் தான் கழகம்.. இது தான் அண்ணா கண்ட திமுக. யாரின் காலிலும் விழுந்து பதவி பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தை காப்பாற்றியது போல, நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story