சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் விமான போக்குவரத்து தொடங்கியது - ஒரு மாதத்தில் முழு சேவை இயங்கும்


சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் விமான போக்குவரத்து தொடங்கியது - ஒரு மாதத்தில் முழு சேவை இயங்கும்
x

சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் நேற்று நள்ளிரவு முதல் விமான சேவை தொடங்கியது. இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு ஒருங்கிணைந்த புதிய விமான முனையம் முதல் கட்டமாக 1 லட்சத்து 36 ஆயிரத்து 295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் கையாளப்படுகின்றனர். புதிய முனையம் மூலம் 30 மில்லியன் பயணிகளை கையாளும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கியது. பின்னர் விமான நிலையத்தில் கூடுதலாக சில அபிவிருத்திப்பணிகள் செய்யப்பட்டன.

மே மாதம் 3-ந் தேதியில் இருந்து சோதனை முறையில் சில விமானங்கள் புதிய முனையத்தில் இயக்கப்பட்டன. ஆனால் சிறிய ரக விமானங்களான ஏர்பஸ் 320, 321 மற்றும் போயிங் ரக 737, 738 விமானங்கள் மட்டுமே சோதனை அடிப்படையில் வந்து சென்றன.

குவைத், இலங்கை, எத்தியோப்பியா நாடுகளுக்கும் சோதனை முறையில் இயக்கப்பட்டன. பகல் நேரங்களில் மட்டுமே நடந்து வந்த விமானங்கள் சோதனை ஓட்டம் இரவு நேரங்களிலும் புதிய முனையத்தில் நடந்தன. சோதனை ஓட்டத்தின்போது ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

செல்போன் சிக்னல்களில் தடை ஏற்பட்டதாகவும், வேறு சிறு பிரச்சினைகளும் ஏற்பட்டதாக தெரிகிறது. தற்போது பிரச்சினைகளை தீர்க்கும் விதத்தில் புதிய கருவிகள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் விமான போக்குவரத்து தொடங்கியது. 180 இருக்கையில் இருந்து 194 இருக்கைகள் வரை உள்ள நடுத்தர விமானங்கள் இந்த புதிய முனையத்தில் இயக்கப்பட உள்ளன.

முதற்கட்டமாக கொழும்பு, சிங்கப்பூர், துபாய், தமாம், மஸ்கட், தோஹா, குவைத், மலேசியா, அபுதாபி ஆகிய நாடுகளுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன பன்னாட்டு விமானங்கள் இயக்கப்படும் என விமான நிலைய ஆணையகம் அறிவித்து உள்ளது.ஜூலை மாதத்துக்குள் புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம் முழு அளவில் செயல்பட இருக்கிறது. அப்போது இந்த முனையங்களில் சிறிய, நடுத்தரக மற்றும் பெரிய ரக விமானங்கள் அனைத்தும் இயங்கத் தொடங்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story