தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி உடனடியாக வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்


தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி உடனடியாக வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
x

தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி உடனடியாக வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய 'டுவிட்டர்' பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் தடைபட்ட, அரசு பள்ளிகளின் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம், நிலைமை சீரடைந்தபிறகும் இன்று வரை மீண்டும் தொடங்கப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

2020-21, 2021-22-ம் ஆண்டுகளில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டிருக்கவேண்டும். நடப்பாண்டில் மேலும் 5½ லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான ஆயத்தப்பணிகள்கூட நடப்பதாகத் தெரியவில்லை.

இன்றைய கல்விச்சூழலில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மிகவும் அவசியமானவை. ஆனால், அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் அதை விலைகொடுத்து வாங்கமுடியாது. அந்தவகையில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது சிறப்பான திட்டம்.

மடிக்கணினி வழங்க நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் கைவிடப்படுமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அத்தகைய நடவடிக்கை எதையும் தமிழக அரசு மேற்கொள்ளக்கூடாது. தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story