முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெல்லியில், சமூகநீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தேசிய மாநாடு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெல்லியில், சமூகநீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தேசிய மாநாடு
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தேசிய மாநாடு, டெல்லியில் நாளை நடைபெறுகிறது.

சமூக நீதிக்கான மாநாடு

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு, டெல்லியில் உள்ள கஸ்தூர்பா காந்தி மார்க், கன்னாட் பகுதியில் (இந்தியா கேட் அருகில்) நாளை (திங்கட்கிழமை) மாலை 4.30 முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் ஆகியோர் காணொலிக் காட்சி மூலமாக கலந்து கொள்ள உள்ளார்கள்.

இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றுகிறார். சமூக நீதிக்கான போராட்டத்தையும், சமூக நீதி இயக்கத்திற்கான தேசிய கூட்டு திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

திராவிட மாடல் ஆட்சி

சமூக நீதி மற்றும் சமூக சீர்திருத்த இயக்கமாக செயல்பட்டதால் தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வலிமையான அரசியல் இயக்கம் அவசியம் என்பதை உணர்ந்து பேரறிஞர் அண்ணா 1949-ம் ஆண்டில் தி.மு.க.வை தொடங்கினார். அன்றிலிருந்து 74 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பொறுப்புள்ள, சமூக நீதியை காக்கும், திராவிட இனம், மொழி, கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் அருமை பெருமைகளை, பாரம்பரியத்தை வெற்றிகரமாகப் பாதுகாத்து போற்றி வளர்த்து வருகிறது தி.மு.க.

ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் பரிணாமம் பெற்று, ஆட்சியைப் பிடித்து, பேசிய கொள்கைகளை நிறைவேற்றும் சட்டங்களை இயற்றும் தகுதியை அடைந்தது, இந்திய அரசியல் வரலாற்றில் திராவிட இயக்கத்துக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய பெருமை. பேரறிஞர் அண்ணாவை தொடர்ந்து விளிம்பு நிலையில் உள்ள மக்களும் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேம்பாடு அடைந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை கருணாநிதி செயல்படுத்தினார்.

கருணாநிதி வழியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து துறையின் வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்ற பெருமைமிகு திராவிட மாடல் ஆட்சி நடந்து வரும் இவ்வேளையில் இத்தகைய சமூக நீதிக்கான மாநாடு நடைபெறுவது சிறப்பிற்குரியது. சமூகம், அரசியல், பொருளாதாரம், மக்கள் மேம்பாடு அனைத்திலும் நவீனமயம் என்கிற திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாடு அரசு நடத்தி வரும் நிலையில், சமூக நீதியை தேசிய அளவில் முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

பல மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்பு

இம்மாநாட்டில் சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற நீதிபதி வி.ஈஸ்வரய்யா வரவேற்புரை ஆற்றுகிறார். ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான பி.வில்சன் முதன்மை உரையாற்றுகிறார். சிறப்பு விருந்தினர்களாக ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா,

சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச மாநில எதிர்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான பரூக் அப்துல்லா, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரைன், தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வும், முன்னாள் மராட்டிய துணை முதல்-மந்திரியுமான சஜன் சந்திரகாந்த் புஜ்பால், ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங், பீகார் - ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் குமார் ஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான இ.டி.முகமது பஷீர், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி எம்.பி. கே.கேசவ ராவ், ராஷ்டிரிய சமாஜ்பக் தேசிய தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் மந்திரியுமான மகாதேவ் ஜன்கர், அசாம் எம்.பி. நபா குமார் சாரானியா, அரியானா லோக் தந்திர சுரக்சா கட்சியின் முன்னாள் எம்.பி.ராஜ்குமார் சயினி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

கி.வீரமணி, வைகோ பங்கேற்பு

தமிழகத்தில் இருந்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story